அரிதாய் அலர்ந்த அற்புதமே !
மூவரும் கலந்த முதல் குருவே !
அறிமுகமான ஆறாம் திருநாளே ,
அடியவர் மகிமையை அடியவர் அருளால்
அழகாய் இயற்றிட அருள் சுரப்பாய் !
காப்பவன் பெயரை தன்னுள் அடக்கிய
புண்ணிய அகமாம் எழில்மிகு பத்ரியில்
வேதம் உணர்ந்த வியன்மிகு ப்ராமணர்
காப்பவன் பெயரைத் தன்னுள் அடக்கிய
பரம பக்தராம் பண்டித மேதை ஹரிசாடே
கருணைக் கடலாம், கலைமகள் மகனாம்
பாற்கடல் திருமகள் பாராமுகமாம்
பூலோகத் திருமகள் பூவாய் வந்தாள்
புண்ணிய ஹரியின் இல்லறம் புகுந்தாள்
இனிமை கூட இறையருள் பொழிய
இறையே வரமாய் வந்து தவழ்ந்தாய்
ஒருத்தி மகனாய்ப் பிறந்து,
ஒருத்தி மகனாய் வளர்வது
உனக்கு ஒன்றும் புதிதில்லையே !
ஹரி, லக்ஷ்மி கனவில் வந்தாய்
இஸ்லாமிய பக்கீரிடம் ஈயச்சொன்னாய்
பாசம் பொழி பக்கீருடன் பால்கனாய்ச் சென்றாய்
இனம், மொழி இரண்டிலும் இரண்டறக் கலந்தாய்
கலக்கவும் செய்தாய், கடக்கவும் செய்தாய் !
பூவுலகை வழி நடத்த அன்புடன் அவதரித்தாய் நீ
செல்லச் சிறுவனாய் தளிர் நடை பயின்றாய்
அன்பான பக்கீருக்கு அல்லாவின் அழைப்பு
அன்னையின் துணையுடன் சேலுவை அடைந்தாய்
சிந்தனைச் சிற்பியாம், ஞாலத்தின் ஞானியாம்
வெங்குசா ஜமீனாம் கோபால்ராவ் தேஷ்முக்
குருவிற்கு குருவானார், ஞானிக்கு ஞானியானார்
மாற்றம் என்பது மானுட தத்துவமல்லவா?
குருவின் சத்குரு நீ !சீடன் ஆனாய்
ஞான யோகி நீ ! பால யோகியானாய்
வெங்குசா உனக்கு ஞானமார்க்கம் பகர்ந்தார்
பொறுமையுடன் நீயும் போதனை கேட்டாய்
பொறாமைக்காரன் உன் மீது செங்கல் வீசினான்
கல்லோ, வில்லோ உனக்கு புதிதா?
உயர்ந்த ஆத்மா, உன்னத உன் குரு!
நியூட்டன் விதியை விளையாட்டாய் வென்றார்
செங்கல் அன்று திரிசங்கு ஆனது!
மறு கல் குருவின் சிரத்தைத் தாக்க
செந்நீர் கண்டு கண்ணீர் உகுத்தாய்
வருடங்கள் ஓடின, வாலிபன் ஆனாய்
உன் குருவின் அமுதான அருளால்
மலட்டுப் பசுவோ பாலைச் சுரந்தது
செங்கல் எறிந்தவன் தன்னுயிர் நீத்தான்
பக்தனுக்கு பக்தனாகும் பரிபூரணன் நீ!
பணிவுடன் கரமேந்தினாய் த்வயோகி வெங்குசாவிடம்
ஆற்றல் வளர்ந்தது, அற்புதம் நிகழ்ந்தது
தெய்வமுன் முகத்தில் தேஜஸ் மிளிர்ந்தது
அவதாரப் பயனை அகிலம் உணர உடனடித் தேவை
கருணைத் தாய் போல் பரிவுடன் ஊட்டினாய்
இறந்த பாவியை உயிப்பித்துப் புண்ணியனாக்கினாய்
அற்புதம் கண்டு பரவசப் பட்டனர் பக்தர்கள்
குருவின் சொல்படி குருவைப் பிரிந்தாய்
பிரிவு தாளாமல் கண் மலர் சொறிந்தாய்
வெங்குசாவின் பரிசாய் செங்கல்லைப் பெற்றாய்
பார் புகழும் பாரதத்தில், மகத்தான மஹாராஷ்டிராவில்
கோதாவரிக் கரையில், சீர்மிகு சீரடியில்
வேப்பம்ர நிழலீல் வியத்தகு வேந்தன் ஆனாய்
எளிதும், அரிதும் அழகாய் இணைந்த
இனிதினும் இனிது நீ ! இறைமை நீ !
இளம் யோகி நீ ! காந்த யோகி நீ !
இயற்கையின் சீற்றத்தை, பருவத்தின் மாற்றத்தை
பொருட்படுத்தாத புனிதப் பூமகன் நீ!
அமைதியாய் ஒளிர்ந்த அகல் விளக்கு நீ!
மௌனமாய் மிளிர்ந்த மாமதியும் நீ!
புரியாத புதிரான பாரிஜாதப் பூ நீ !
கோவில் பூசாரி மகல் சாபதிக்கு உன்மேல் பாசம்
உனக்கோ அவருடன் பூர்வ ஜென்ம பந்தம்
பித்தனையும், பேயனையும் பூஜித்த மகல் சாபதி
பித்தனாய்த் தோன்றிய உன் பார்வையில் கரைந்தார்
சித்தரைச் சேவித்தார், பக்தராய்ப் பணிந்தார்
உலகாலும் மும்மூர்த்திகளின் மூன்று பக்தர்கள்
மகல் சாபதி, காசிநாத், ஜோக்லே ஆவர்.
சீரடி மக்களின் சீலம் மிகு மருத்துவரானாய்
அன்றாடம் உனக்கு அமுதளித்த ஆமன்பாயின்
அருமைப் புதல்வன் தொழுநோயால் துவள
நல்ல பாம்பின் நஞ்சமுதால் காத்துத் தாயானாய்
அவன் ஒழுக்கம் தவறினான், மீண்டும் தொழுநோய்
அழுதான், தொழுதான், த்ண்டித்து த்ந்தையானாய்
தொழுநோய் முற்றிப் பரலோகம் அடைந்தான்
சீரடியிலிருந்து ஒரு நாள் மாயமாய் மறைந்தாய்
சாந்த்பட்டீல் குதிரையைத் தேடி அலைந்தார்
பரிவுடன் நீயோ உதவிக்கரம் நீட்டினாய்
அவ்ரைப் புகை பிடிக்க அழைத்தாய், தீயில்லை
உன் குச்சியின் நுனியால் மண்ணைத் தட்டினாய்
நெருப்பு ஒரு புறம், நீர் மறு புறம்
மலத்துப்போய் சரணடைந்தார் சாந்த்பட்டீல்
பக்தனின் இல்லத்தில் எளிமையாய்த் தங்கினாய்
திருமணம் காண பக்தருடன் சென்றாய் சீரடி
’யா சாயி!’ என பக்தர்கள் போற்றினர்
அற்புத நாமம், ஆனந்த நாமம், ஆன்மிக நாமம்
ஊரில் பட்டது உன் பொன்னான திருவடி
புண்ணியம் பெற்றது சிறப்புமிகு சீரடி
உன் பொன்னிற மேனி மண்ணிறமானது
புழுதி மிகுந்த காற்றின் கடுமையால்
மக்கள் இறைஞ்ச, மனம் இறங்கினாய்
மகிழ்ச்சியைப் பெருக்க மசூதியில் தங்கினாய்
ஓர் இளம் காலை, பரிதி வந்த நேரம்
நீண்ட நேரம் கோதுமை அரைத்தாய்
அரைத்ததை எறிந்து காலராவை அகற்றினாய்
கோதுமை அரைத்ததன் உள்நோக்கம் என்ன?
அரைக்கும் திருக்கையின் திருமந்திரம் என்ன?
மானுடத்தின் தீமையும், பாவமும் அரைத்துத் தீர்த்தாய்
உற்று நோக்கினால் உணரும் உண்மை
திருகையின் கீழ்க்கல் கர்மம், மேல் கல் பக்தி
பாபாவின் கைப்பிடி ஞானத்தின் வாசற்படி !
கோவில் விளக்குகளேற்ற வணிகர்களைக் கையேந்தினாய்
எண்ணெய் தர மறுத்து உன்னை அனுப்பினார்கள்
தண்ணீரை ஊற்றி தீபங்களை ஒளிர வைத்தாய்
வணங்கிய வணிகர்கள் அடியவர்கள் ஆனர்
உலகினர்க்கு உன் உரத்த செய்திதான் என்ன?
உண்மையே பேசி உத்தமராய் வாழுங்கள்
சீலர்கள் அனைவரையும் சீடர்களாய் ஏற்கவில்லை
பக்தர்கள் அனைவரையும் குழந்தைகளாய் ஏற்றாய்
கண்டோபா கோவிலில் குடியேற எண்ணம் கொண்டாய்
இஸ்லாமியர் என்பதால் மகல் சாபதியால் தவிக்கப்பட்டாய்
இன்னா செய்தார்க்கும் இனியவை செய்த சால்பு நீ
மகல் சாபதியை மசூதியில் தங்க கருணை புரிந்தாய்
அல்லாவைக் காண கூடு விட்டு சென்ற
வெள்ளைக் குயிலான வேத வித்தகன் நீ
மூன்று நாட்களில் முழுதாய் திரும்பிய தேவகுரு நீ
மசூதியில் ஓர் இரவு, சாவடியில் மறு இரவு
மாறி, மாறித் தங்கிய மகத்துவம் என்னவோ?
மகல் சாபதி ஆண் குழந்தை பெற அருள் பொழிந்தாய்
வறுமை நீங்கிட வ்ருணன் போல் பண உறை ஈந்தாய்
திருடர்கள் ஜாக்கிரதை என பாம்புகள் பற்றி எச்சரித்தாய்
உன் கருணை மழையில் உள்ளம் நனைந்தார் மகல்சாபதி
தொண்டைப் புண்ணில் துடித்துப்போனார் சாபதி மனைவி
உன் உதி மருந்தாகியது, வலி மறைந்து போனது
பாபா புராணம் படித்துப் பரவசிக்க
சாபதியை அழத்தார் ராம்பாள் ஹர்தே
சச்சரவுகள் வருமென்று சாதுர்யமாய் சொன்னாய்
நாயை விரட்டிய சாபதிக்கு நேயம் உணர்த்தினாய்
பங்குனி உத்தரத்திற்கு சாபதி காவடி எடுப்பார்
அவர் குழுவில் ஒருவரை காவலர் பிடித்தார்
அனுமதிச் சீட்டு பெற்று வர ஒருவரை கர்ணம் பணித்தார்
கர்ணம் அவரை விறகு வெட்டப் பணித்தார்
ஓ சாயி ! உன் அருளால் விறகு உடையவில்லை
மீண்டும், மீண்டும் உடைந்தது கோடரி
அச்சமுற்ற கர்ணம் அனுமதி அளித்தார்
தந்தையின் திதியை பக்தியுடன் செய்தார் மகல்சாபதி
ஏகாதேசியான அன்று தூய பக்தியுடன் ராம ஜெபம் செய்தார்
பக்தியின் மகிமையால் மகனின் மடியில் உயிரை நீத்தார்
பொற்பதம் பெற்ற சாபதி வாழ்க்கை அற்புத வாழ்கை
இறையடி சேர்ந்த மகல்சாபதிக்கு கோடி வணக்கங்கள்!
திருமகளும், கலைமகளும் இணைந்திருக்கும் இல்லத்தின்
இணயற்ற மகனாம் நாராயண கோவிந்த சாந்தோர்க்கர்
இருபது வயதில் கல்லூரி கடந்து ஏழு ஆண்டில்
கலெக்டர் ஆனார், பாஷ்யம் பயின்றார், கீதை கற்றார்
அன்பின் மிகுதியால் அனைவருக்கும் அவர் ‘நானா’ வானார்
முன் ஜென்ம தொடர்பால், குல்கர்ணி மூலம்
பாபாவை அடைந்தார், மலரில் வண்டாய் தொடர்பு தொடர்ந்தது
தேவியை வணங்க மலைக்குச் சென்றார் சாந்தோர்க்கர்
தாகம் தணிக்க பாபாவை தியானித்தார், வேடன் வந்தார்
தாகம் தணித்து மாயமாய் மறைந்தார்,என்னே உன் கருணை!
ரயில் தாமதம், நேரம் போனது, நடுநிசியானது
பாபா உன் கருணையால் தரிசனம் கிடைத்தது தேநீருடன்
கதாகாலட்சேபம் செய்யும் ஹரிதாஸ் பாபாவின் பக்தர்
ஹரியும், நானாவும் பாபாவை வணங்கி அஹமத் கிளம்பினர்
’உண்டு செல்லுங்கள்’ என பாபா கூற நானா பணிந்தார்
தாமதம் கருதி உண்ணாமல் கிளம்பினார் ஹரி
ரயில் தாமதம், நானாவும் ஹரியுடன் இணைந்தார்
சர்வமும் நீயே என்று சரணடைதல் பற்றி சிலாகித்தார் நானா
ஹரியோ தவறை உணர்ந்து மனம்வருந்தினார்
கோபர்காம் கிளம்பிய நானாவை நாளை போகலாம் என்றாய்
உன் வாய் மொழி சத்தியம் என்பதால் ஒத்தி வைத்தார் நானா
மறு நாள் கோபர்காம் அடைந்த நானா அதிகாரியின்
தாமத வருகை அறிந்தார் தந்தியின் மூலம்
உன் கருணை மழையில் நானாவின் இதயம் சிலிர்த்தது
பின்னர் ஒரு முறை உந்தன் அருளால் நானா
குதிரை வண்டி விபத்தில் சிக்கிப் பிழைத்தார்
நானா சாது ஒருவர்க்கு உதவிக் கரம் நீட்டவில்லை
மனிதனான நானா உன்னிடம் மன்னிப்பு கேட்டார்
இறைவனான நீ மன்னித்து அருளினாய்
காக்கை, எறும்பு, நாய் அனைத்தும் அதிதிகள் என்று
நானாவிற்கு உணர்த்திய அவதாரப் புருஷன் நீ!
நானாவின் செல்ல மகள் சுகமாய்ப் பிரசாவிக்க
உள்ளம் உவந்து நீ உதியை அளித்தாய்
பின் புயல் அடிததது நானாவின் வாழ்வில்
மாண்புமிகு மருமகனும் செல்லப் பேரனும்
மண்ணுலகம் நீங்கி விண்ணுலகம் சென்றனர்
துயரில் கரைந்தார், வேதனையில் தளர்ந்தார்
சோதனைக்கு காரணம் கேட்டு உன்னைச் சரணடைந்தார்
புன்னகையுடன் உதிர்த்தாய் நீ தத்துவ முத்துக்களை
குழந்தை பூப்பதும், உறவினர் உத்ர்வதும்
அவரவர் செய்த கர்மாவின் பலன் என்றாய்
வினையின் வேரறுக்க நான்முகனாலும் முடியாதென்றாய்
நல்வாழ்க்கை நாட அலைகள் ஆறை கடக்கச் சொன்னாய்
காமம், குரோதம், லோபம்,மோகம், மதம், மாற்சரியம்
கடக்க வேண்டிய அலைகள் இவையே
மெய் போல் தோன்றும் மாயை இவையே
செடிகளில் பழுக்கும் கனிகள் கனத்தால்
கனிகளைத் தாங்கும் செடிகள் வளையும்
மனிதனின் வாழ்வில் செல்வம் கனத்தால்
பகட்டிற்குப் பதிலாய் பணிவே வேண்டும்
கொடிய மனிதனிடம் கடுமை வேண்டும்
அன்பான வாழ்க்கையில் அறமே வேண்டும்
சிக்கனம் வேண்டும், கஞ்சம் வேண்டாம்
வாழ்வில் மட்டற்ற மகிழ்ச்சி வேண்டும்
தூய உள்ளத்தால் இறைவனை தியானிக்க வேண்டும்
ஆடம்பரத்திற்காக தியானித்தால் அணுவளவும் பலனில்லை
ஆத்மார்த்த தியானத்தால் தூய்மை அதிகரிக்கும்
உன் அன்பான உபதேசத்தால் சாந்தோர்க்கர் தெளிவுற்றார்
உன் அகத்தில் என்றுமே நானாவிற்கு முதலிடம்
சாந்தோர்க்கரின் பாதுகாவலர், பிராமணப் போலீஸ்
பாட்டிசைக்கும் நாடக நடிகர் காண்பத்ராவ் தாத்ரேயஸகஸ்ரபுத்தே
அவர் வேலையை விடச்சொல்லி நீ உத்தரவிட்டாய்
சோதனை வந்தது உன்னால் விடுபட்டார்
வேலையை விடப்போவதாய் உறுதிமொழி வழங்கினார்
சத்தியம் சர்க்கரை, உறுதிமொழி உப்பு அவர்க்கு
கொள்ளைக்காரன் கானாபீலை பிடிப்பதில் மாட்டிக்கொண்டார்
செய்யாத தப்பிற்காக வேலையிலிருந்து நீக்கப்பட்டார்
உன்னை நம்பியதால் கீர்த்தனை பாடி பிழைக்கச் செய்தாய்
இசையின் திறத்தால் தாஸ்கணு ம்ஹாராஜாவானார்
தாஸ்கணு ஒரு நாள் நீராட, உன் அருளின் மிகுதியால்
உன் கட்டை விரல்களில் கங்கை, யமுனை
பிரயாகை நீரை பக்தன் அருந்தவில்லை, மன்னித்தாய்
ஈசா உபநிஷத்தைப் புரியாமல் தவித்தார் தாஸ்கணு
உன்னருளால் காகா சாஹேப் வீட்டில் சிறுமியைக் கண்டார்
ஏழைச் சிறுமி கந்தலிலும் மகிழ்ந்தாள்,
புத்தாடையிலும் அதேபோல் மகிழ்ந்தாள்
அனைத்திலும் ஆண்டவன், அனைத்தும் அவன் செயல்
உள்ளத்தில் உணர்ந்தார் தாஸ்கணு
ஆன்மிகப் பயணத்தைத் தொடர்ந்தார்
உன் அழகான திருவாய் மொழியே ‘அல்லா மாலிக்’
அதுவே ’இறைவன் பெரியவன்’ ஆகும்
இறைவனின் புகழை ஏழு நாள் பாடினால் நாமசத்தம்
நீ தாஸ்கணுவைப் பணித்தாய் நாமசத்தம் பாட
பாட்டின் முடிவில் இறைவனைக் காண தாஸ்கணு விழைவு
மனம் ஒன்றுபடு, பாவத்துடன் பாடு,
கடவுளைக் காணலாம் என்றாய் நீ
நாரதர் கானம் போல் இசைமழை பொழிந்தார்
கவனம் பாட்டில் இல்லை, பலனில் இருந்தது
கிட்டவில்லை தரிசனம் தாஸ்கணுவிற்கு
அதனால் அவர்க்கு உன் சக்தியில் சந்தேகம்
பூலோக வைகுண்டமாம் பெருமைமிகு பண்டரிபுரம்
விட்டலைட் தரிசிக்க தாஸ்கணுவிற்கு விழைவு
உந்தன் அருளால் தரிசித்து திரும்பினார்
உன்னுள் மகானைக் கண்டார்,பகவானை அல்ல
சிற்றூர் நந்ததத்தின் மகானின் பேருதவியால்
அகந்தை அகற்றி உன்னுள் இறைவனை உணர்ந்தார்
சாயி உன் புகழை போற்றிப் பாடிய மகாராஜா
தாஸ்கணுவிற்கு பணிவான நமஸ்காரங்கள் !
கந்த்வா நகரின் அந்தணச் செவல்வர் ஹரி சீதாராம் தீஷித்
விடிவெள்ளி திலகருக்காக வெள்ளையரை எதிர்த்தவர்
இந்திய தேசிய காங்கிரசின் சிறப்புச் செயலாளர்
விபத்தில் சிக்கி முடமானார், உள்ளம் தளர்ந்தார்
நானாவின் பரிந்துரையால் உன் பக்தரானார்
தீஷித்தின் மகள் விழுந்தபோதும் காயமில்லை
உன் அருளால் தவ வாழ்வை வாழ்ந்தார் அவர்
உன் அருள் பெற்று தீஷித்தின் மனைவி மும்பை திரும்பினார்
பசுவை வாங்கினார் பாசத்துடன் தீஷித்
கை மாறும் பசுவைக் காட்டி உண்மை விளக்கினாய்
பொருள் நிலையல்ல, அருளே நிலையென உணர்த்தினாய்
தீஷித்திற்கு காய்ச்சல், நெய்யுடன் சீரா மருந்து
உன் அருளால் குணமடைந்தார் ஒன்பது நாளில்
காணிக்கை மறந்த தீஷித்திடம் கேட்டுப் பெற்றாய்
தீஷித்தின் தம்பியின் உடல் நலம் காத்தாய்
ஆட்டை வெட்ட தீஷித்தைப் பணித்தாய்
கட்டளைக்குப் பணிந்து வாளை உயர்த்தினார் தீஷித்
தடுத்து ஆட்கொண்டாய் கருணைத் தெய்வம் நீ
அவர் மகனை கடும் நோயிலிருந்து காத்தாய் நீ
தேர்விலும் வெல்லச் செய்த கருணா மூர்த்தி நீ
உன் உன்னத அருளை முழுதும் பெற்றவர் தீஷித்
அவர் ப்ரார்த்தனை பலித்தது 1926, ஜூலை 5 யில்
ஏகாதசியன்று பொன்னுடல் நீங்கி உன்னடி சேர்ந்தார்
ஒப்பற்ற தீபமாம் தீஷித், உள்ளம் உருக வணங்குவோம்
எளிய குடியில் பிறந்து நீதிபதியாய் உயர்ந்தவர்
அன்னா சாஹேப் தபோல்கர் அரிய மனிதர்
தீஷித்தின் ஆத்ம நண்பர்களாம் அவரும், ஆப்தேயும்
நீதி நூல்களை நேசித்து நுகர்ந்தவர்,
புராண நூல்களைக் கற்றுத் தேர்ந்தவர்
தன்னம்பிக்கை மிகுதியால் குருவைத் தேடவில்லை
மகளை இழந்தார், துக்கத்தில் ஆழ்ந்தார்
உலகப் பற்று ஒரு புறம், அகம்பாவம் மறு புறம்
மனதால் நெருங்கவில்லை உன்னை அவர்
ஏழாண்டில் ஒரு நாள் அவர் உன் காலை வருட
பரம பக்தர் ஸாதே வந்தார்,தன் கனவில்
நீ காட்சி கொடுத்ததைப் பகர்ந்தார் உன்னிடம்
குரு சரித்திரம் படித்ததின் பலனென மகிழ்ந்தார்
தபோல்கருக்கு நொந்தது மனம் கனவில் நீ வராதது
எண்ணமறிந்து நீ அவரை சாமாவிடம் அனுப்பினாய்
15 ரூபாய் பெற்று வரப் பணிந்தாய்
சாமாவோ 15 வணக்கங்கள் வழங்கினார்
உண்மையான அன்புடன் உபதேசமும் வழங்கினார்
ராதாபாய் தேஷ்முக் உன் மகிமை உணர்ந்த பெண்மனி
உன்னருளால் உன் மந்திர உபதேசமும் பெற்றவள்
உன் குருவிடம் நீ இரண்டு பைசா கொடுத்து
கற்றதைப் பகர்ந்தாய் கருணை பொழிந்தாய்
முதல் பைசாவோ உன் சரணாகதி தத்துவம்,
மற்றொரு பைசா மனித நேயத்தோடு ஆன்ம ஒருமைப்பாடு
மும்மூர்த்தியும் கலந்த திருமூர்த்தி நீ
நம்பியோர்க்கு நல்லருள் நிச்சயம்
உள்ளம் தெளிந்தார், பக்குவம் பெற்றார் தபோல்கர்
உன்னைச் சரணடைந்தார் புடம் போட்ட பொன்னானார்
உன்னருளோடும், சாமாவின் உதவியோடும்
உன் முதல் சரித்திரம் எழுத ஆவல் கொண்டார்
உதியும், ஆசியும் அளித்து பொன்மொழி உதிர்த்தாய்
வெளிக்கருவி தபோல்கர் ; உள்கருவி நீ என்றாய்
’நான்’ இல்லாதவருள் ’நீ’ நிறைவாய் என்றாய்
நீ சமாதி அடையுமுன் அத்தியாயம் பூர்த்தி
பின் ‘சாயி லீலை’ என தொடராய் வந்த சுடர் நீ
பற் பல மொழிகளில் மொழி பெயர் பல் மொழி நீ
தபோல்கரின் முழு நேர சேவையானாய்,
ஈடற்ற அருளளித்த ஒளி தீபம் நீ!
சாதனா கிராமத்தில் பிறந்த பிராமணர்
கல்வியில் நாட்டமில்லா காசிநாதர்
புரோகிததிலும் புலமை இல்லை
இளமையில் இருமுறை மணந்தார்
இருவரையும் இழந்தார் அலைந்து திரிந்தார்
பிராணாயாமமும், யோகமும், பூர்காட் மலையும்
காசிநாதரைக் கவர்ந்தது, தியானம் செய்தார்
பசி மறந்தார், மரத்துப் போனார் மரத்தைப்போல்
உணர்வு வந்தது ஒருமுறை, தாகம் எடுத்தது
உன் கருணை மழையால் தாகம் தீர்ந்தது
சக்தி பிறந்தது, கனவும் வந்தது
கனவில் வந்தனர் இந்துவும், முஸ்லிமும்
உள்ளொளி தோன்றி உறுதுணை உண்ர்ந்தார்
சாங்கிலி ஊரில் வெங்கட்ரமணாச்சாரியிடம்
வடமொழியோடு, ஆயுர்வேதமும் பயின்றார்
அமராவதியில் மருத்துவம் புரிந்து புகழும் பெற்றார்
உன் பக்தர் கபசுதே இவரிடம் சிகிச்சை பெற்றார்
1902 யில் ‘பேஷஜ ரத்னமாலா’ என்னும் மருத்துவ
நூலால் மகத்துவம் பெற்றார், பெருமையும் பெற்றார்
பண்ணையை வாடகைக்கு விட்டார், வசூலிக்க முடியவில்லை
உடல் நலம் கெட்டார், ஊருக்குத் திரும்பினார்
மூன்றாம் மனைவியுடன் யாத்திரை சென்றார்
பின் தீராத நோயுற்றார், யோகி குல்கர்ணி
உன்னைச் சரணடைவதே உற்ற வழி என்றார்
வைதிக பிராமணர் இஸ்லாமியரிடம் செல்வதா?
சித்தம் குழம்பினார்,ரஹூரியிலும், ஜேஜூரியிலும்
கருணையுடன் நீயோ காசிநாத்திற்கு வெந்நீர் அளித்தாய்
பின் உன் பக்தரானார், காண்டோபா ஆலயம் செல்லப்
பணித்தாய் நீயும்,அனைத்தையும் உனக்கே அளித்தார்
உபவாசம் இருந்ததால் ‘உபாசினி’ என அழைக்கப் பட்டார்
அவரை சும்மாயிரு, தெய்வாம்சம் வரும் என்றாய்
உன்னருளால் ஆன்ம ஞானம் பெற்றார்,
உபாசினி பாபா பின்பு ‘உபாசினி ராஜா’வானார்
நீயோ பகலில் பணக்காரன், மாலையில் பக்கிரி
உபாசினி பாபாவோ பொன்னாசை பெற்றும்
மண்ணாசையில் மங்கியும் பெருமை குன்றினார்
1941 யில் அவர் மறைந்தார், அவர்‘கன்யாஸ்தன்’ உள்ளது
உபாசினி பாபாவிற்கு ஆன்மிக உலகின் ஆத்ம நன்றிகள்!
No comments:
Post a Comment